வாழ்த்துக்கள்

 

வாழ்த்துகள் 

 

வானவில்

இணைய இதழ் 

ஓராண்டு நிறைவு பெற்ற 

குழந்தையாக 

தவழ்கிறது நமது கைகளில் 

 

ஒற்றை 

என்பதை வேரறுத்து 

பல வண்ணங்களை 

அணிந்து வரும் 

வானவில் பேரழகு

 

தாய் நாட்டு செல்வம் எல்லாம் 

ஒரு சில கார்பரேட்டுகளிடம் 

மலைமலையாய் குவிந்திருக்க 

 

கோடான கோடி மக்கள் 

வாழ வழியின்றி 

வீதியிலே படுத்துறங்க 

 

எல்லாம் விதி என்று ஜோதிடம் சொல்கிறது 

அரசாங்கம் 

 

ஆள்வோரின் 

கபட நாடகங்களை 

கண்டு மயங்கி- ஏதும் 

அரியா சனங்களாக 

மக்கள் உள்ளவரை 

 

அரியாசனங்களில் 

நர வேட்டையாடியவர்களே

ரத்தம் வழியும் வாய்களோடு 

சொர்க்கம் குறித்து 

எழுதி வைத்த உரைகளோடும் 

நமக்கு ஆசி வழங்குவார்கள் 

 

ஒரு சிலை உயர்ந்து நின்றால் 

நம் வீட்டு அடுப்பில் அரிசி 

உலை கொதிக்குமா

 

ஒரு சாமிக்கு 

கோவில் கட்டி முடித்தால் 

என் பசியும் 

உன் பசியும் தீருமா 

 

அடர்ந்த இருளே 

நிரந்தரம் என்று 

கட்டளையிட்டால் 

இயற்கை அதை ஏற்குமா

 

இருளடைந்த 

அதிகாரத்திற்க்கு எதிராக 

பகலொளியாய் 

பரந்து ஒளி வீசுவோம் 

 

ஒரே மொழி என்று 

செம் மொழி மீது 

ஆதிக்கம் செய்தால் 

தமிழின் 

எல்லா எழுத்துக்களும் 

ஆயுத எழுத்தாய் மாறும் 

என்பதை புரிய வைப்போம் 

 

மானிடரின் 

இடர்களையும்-மனத் 

துயர்களையும் 

துடைத்தெரியும் 

தூரிகையாகட்டும் 

வானவில் 

 

பெண் உரிமைக்கும் 

சமூக நல்லிணக்கத்திற்கும் 

பலம் சேர்க்கும் படைப்புகளை தரட்டும் 

வானவில் 

 

உழைப்பவனையும் 

உழவனையும் 

சாதி,மதம்,மொழி என

பிறப்பால் மனிதனை பிரிக்கும் 

சனாதனத்துக்கு எதிராக 

சமரசமின்றி 

எழுத்தாயுதத்தை 

உயர்த்தி பிடிக்கட்டும் 

வானவில் 

 

இந்து முஸ்ஸிம் கிருஸ்துவரெல்லாம் 

ஒரு தாய் மக்கள் என்ற 

ஒருமைபாட்டை 

உயர்த்தி பிடிக்கட்டும் 

வானவில் 

 

தனித்துவம் நம் உரிமை 

பன்மைத்துவம் நம் வலிமை என்ற 

மாநில தமுஎகசவின் 

முழக்கத்தை முன்னெடுத்து பயணிப்போம் 

 

வானவில் 

இணைய இதழின் 

ஆசிரியர் குழுவிற்கும்

படைப்பாளிகளுக்கும்

வாசக பெருமக்களுக்கும் 

மனம் நிறைந்த வாழ்த்துகள்

 

ஆர் குமார் 

தமுஎகச மாவட்ட செயலாளர் திருப்பூர்

"வானவில் மின் இதழ் ஆண்டுவிழா மலருக்கு மாவட்ட செயலாளர் வாழ்த்துக்கு கவிதை"

Comments

Popular posts from this blog